Tamilnadu
விசாரணை என்ற பெயரில் அடித்து கொடுமை செய்த போலிஸ்.. மனஉளைச்சலில் பெண் தற்கொலை - அ.தி.மு.க ஆட்சியில் அவலம்!
சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சம்பூர்ணம். இவரது கணவர் ராஜா, சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவரது மகன் அஜித்குமாருடன் வசித்து வந்தார். அஜித்குமார் செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பார்சல் சேவை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அஜித்குமார் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணை காதலித்து வந்துள்ளார். பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இருவரும், திருமணம் செய்துகொண்டு தலைமறைவாகிவிட்டனர்.
இதையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோர், செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் அஜித்குமார் மீது புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார், அஜித்குமாரின் தாயாரை அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, மகன் இருக்கும் இடத்தைச் சொல்லுமாறு சம்பூர்ணத்தை அடித்து கொடுமைப் படுத்தியுள்ளனர். மேலும், மகனை காவல்நிலையத்தில் ஒப்படைக்காவிட்டால் கைது செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதனால் மன வேதனையடைந்த சம்பூர்ணம், மார்ச் 26ம் தேதி இரவு விஷம் குடித்துள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சம்பூர்ணம் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, சம்பூர்ணத்தை போலிஸார், அடித்துக் கொடுமைப்படுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறி அவரின் உறவினர்கள் , சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் இதுகுறித்து செவ்வாய்பேட்டை ஆய்வாளர் ராஜாவிடம் உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சம்பூர்ணத்தை விசாரணையின்போது ராஜா மிரட்டியது தெரியவந்ததையடுத்து, அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து காவல்துறை ஆணையர் சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !
-
பிரான்ஸின் வால் டி லாயர் மாகாண சுற்றுலாத்துறையுடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்! - விவரம் என்ன?
-
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
சிறந்த கைவினைஞர்களுக்கு மாநில விருதுகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!