Tamilnadu

46 பேர் தரவுகளோடு எழுதிய 46 கட்டுரைகளின் தொகுப்பு நூல் ‘அறம் வெல்லும்’... வெளியிட்டார் உதயநிதி ஸ்டாலின்!

அடிமை அரசால் தமிழகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலங்கள், இழந்த உரிமைகள் குறித்து பல்வேறு துறைகளைச் சார்ந்த 46 பேர் தரவுகளோடு எழுதிய 46 கட்டுரைகளின் தொகுப்பான ‘அறம் வெல்லும்’ நூலை தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

ஆய்வாளரும் எழுத்தாளருமான சுபகுணராஜன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, எழுத்தாளர்கள் ஜெயராணி, சந்திரா, வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், பத்திரிகையாளர்கள் பரக்கத்அலி, யுவகிருஷ்ணா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “அநீதியின் கால்பிடித்து பிழைப்பு நடத்தும் அடிமைகளால் தமிழகத்தில் தினம்தினம் நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலங்கள், நாம் இழந்துகொண்டிருக்கும் உரிமைகள் குறித்து பல்வேறு துறைகளைச் சார்ந்த 46 பேர் தரவுகளோடு எழுதியுள்ள 46 கட்டுரைகளின் தொகுப்பே ‘அறம் வெல்லும்’ என்ற நூல்.

இன்று தமிழகம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டிருக்கும் விடியலின் முழக்கம் வலுப்பெற இந்த ‘அறம் வெல்லும்’ நிச்சயம் ஒரு கருவியாய் அமையும். இக்கட்டுரை தொகுப்பை நாம் அனைவரும் படிப்போம், இதிலுள்ள கருத்துகளை பொதுமக்களிடம் பரப்புரை செய்வோம்.

இத்தொகுப்பை நான் வெளியிட அண்ணன்கள் சுபகுணராஜன்-பிரின்ஸ் கஜேந்திரபாபு-எழுத்தாளர்கள் ஜெயராணி-சந்திரா-வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்-பத்திரிகையாளர்கள் பரக்கத்அலி-யுவகிருஷ்ணா பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கும் ஜீவா படைப்பகம் கார்த்திக் புகழேந்திக்கும் நன்றி. அநீதி வீழட்டும்-அறம் வெல்லட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘அறம் வெல்லும்’ நூல் குறித்து அந்நூலை வெளியிட்டுள்ள ஜீவா படைப்பகம் கார்த்திக் புகழேந்தி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தமிழகம் முன்னெப்போதும் சந்திக்காத அவலமான காலகட்டத்தை, கடந்த 10 ஆண்டுகளில் சந்தித்திருக்கிறது.

வளர்ச்சி குறித்து எவ்விதத் தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் தாழ்ந்த நிலையில் தமிழகம் நிற்பதற்குக் காரணம், திறமையில்லாத ஆட்சித்தலைமையே. மொழி, இனம், நிலம் என்று நூற்றாண்டுகளாகப் போராடி நாம் பெற்ற அனைத்து உரிமைகளையும் முன்னேற்றத்தையும் இழக்கும் சூழலுக்கு நம்மைத் தள்ளியிருக்கிறது இந்த மக்கள் விரோத அரசு.

குறிப்பாக வகுப்புவாதம் என்கிற ஒட்டகம், தமிழ்க்கூடாரத்தில் தலையைவிட வெறியோடு நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது. தலைக்கே ஆபத்து என்பதை உணராத சிலர், மதவாதத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த 10 ஆண்டுகளில் நாம் இழந்தவை எவை, இழந்துகொண்டிருப்பவை எவை, இருப்பதை எப்படிக் காப்பாற்றப் போகிறோம், இழந்தவற்றை மீட்க என்னென்ன செய்யப்போகிறோம் என்பதை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், துறைசார்ந்த நிபுணர்கள் ஆகியோரின் பறவைப் பார்வையில், அவர்களின் எண்ணங்களை இந்நூல் பதிவுசெய்கிறது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2021 நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், நாம் எதையெதைப் பேசவேண்டும், எவற்றையெல்லாம் பரிசீலிக்க வேண்டுமென நெறிப்படுத்துகிறது இந்த சீரிய முயற்சி.

தேர்தல் பிரசாரத்துக்காக ஒலிப்பெருக்கிகள் அலறிக்கொண்டிருக்கும் வேளையில், இந்நூல் ஏற்படுத்தப்போகும் சத்தம் மிக வலிமையானது. மிக முக்கியமானது. இந்தக் காலகட்டத்துக்கு மிக அவசியமானதும்கூட,

அநீதிக்கு எதிராக எழும் இந்தச் சிறு குரல்கள் அறத்தை வாழவைக்கும் ஆயுதமாக எழுந்து நிற்கும். சிறு குரல், பெருங்குரலாய் மாறும். அநீதி ஒழியும். அறம்வெல்லும். அறம் மட்டுமே வெல்லும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் சேர்ந்து கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை இதோ” - கையோடு கொண்டுவந்த உதயநிதி ஸ்டாலின்!