Tamilnadu

அரசு அறிவித்த கடன் தள்ளுபடிகளுக்கு பட்ஜெட்டில் 1 ரூபாய் கூட ஒதுக்கவில்லை: அதிமுக அரசை சாடும் ப.சிதம்பரம்!

தமிழகத்தில், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து அ.தி.மு.க அரசு அவசர அவசரமாக விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்தது.

மேலும் வரம்புக்கு மீறிய இலவசங்கள் மற்றும் வரி சலுகை திட்டங்கள் உள்ளிட்டவற்றால், தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கும் என பொருளாதார வள்ளுநர்கள் எச்சரித்தனர். ஆனால் அதனைக் காதில் வாங்கிக்கொள்ளாத எடப்பாடி அரசோ, தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என பல்வேறு அறிவிப்புக்களை கவலையின்றி அறிவித்து வந்தார்.

இதனையடுத்து இடைக்கால 'பட்ஜெட்' படி தமிழக அரசின் கடன் சுமை தற்போது, 4 லட்சத்து, 85 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது. இது, 5 லட்சத்து, 70 ஆயிரம் கோடி ரூபாயாக வரும் ஆண்டில் கூடும் என கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு பதவிக் காலம் முடியும் போது வைத்துவிட்டுப் போகும் கடன் ரூ 4 லட்சம் 85 ஆயிரம் கோடி!

2020-21ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வரவுக்கும் செலவுக்கும் இடையே ரூ 65,994 கோடி பற்றாக்குறை!. இந்தப் பற்றாக்குறையை நிரப்பவதற்கு தமிழ்நாடு அரசு மேலும் கடன் வாங்கப் போகிறது.

இந்த லட்சணத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, நெசவாளர் கடன் தள்ளுபடி என்று திரு எடப்பாடி பழனிச்சாமி நாளுக்கு ஒரு தள்ளுபடி அறிவிப்பை வெளியிடுகிறார்.

இந்தக் கடன் தள்ளுபடிகளுக்கு பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை! . “எனக்குப் பிறகு பிறளயம் வரட்டுமே” என்று பிரான்ஸ் நாட்டு் மன்னன் சொன்னது நினைவுக்கு வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 'விவசாயக் கடன் தள்ளுபடி சான்றிதழில் எடப்பாடி படம்': வெற்று விளம்பரங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு!