Tamilnadu

"கூட்டணிக்குள்ளேயே வெடித்த சண்டை" : பா.ஜ.க வேட்பாளரை கண்டித்து பா.ம.க ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பரப்புரை முடிய இன்னும் சில நாட்களே இருப்பதால் பிரதான கட்சிகளான தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க, பா.ஜ.கவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோது அ.தி.மு.கவினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இதனால் பா.ம.க, பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில் அ.தி.மு.கவினர் சரியாகப் பிரச்சாரம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கலியவரதனை கண்டித்து பா.ம.கவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பா.ம.கவில் இருந்தவர்தான் கலியவரதன். பா.ம.கவில் இருந்தபோது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார். இதையடுத்து திருக்கோவிலூரில் பா.ஜ.கவின் வேட்பாளராக கலியவரதன் அறிவிக்கப்பட்டார்.

அப்போதிலிருந்தே பா.ம.கவினர் அதிருப்தியிலிருந்தனர். செயல்வீரர்கள் கூட்டத்தையும் பா.ம.கவினர் புறக்கணித்துள்ளனர். மேலும் பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்வதையும் தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கலியவரதன் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, பா.ம.க தலைவர் ராமதாஸை ஒருமையில் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவினர், பா.ஜ.க வேட்பாளர் கலியவரதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதன் காரனமாக, “இவங்க என்னையா கூட்டணிக் கட்சியா இருந்துக்கிட்டு, தேர்தல் நேரத்துல இவங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக்கிறாங்களே” என தொகுதி மக்கள் முணுமுணுக்கின்றனர்.

Also Read: தோல்வி பயம்: ஒரே பெயரில் சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்தும் பா.ஜ.க- தோதாக சின்னம் ஒதுக்கும் தேர்தல் ஆணையம்!