Tamilnadu

உடைந்தது ஊழல் தடுப்பணை... 3 குழந்தைகளையும் ஒருசேர பறிகொடுத்த குடும்பம் - அரியலூர் அருகே சோகம்!

அரியலூர் மாவட்டம், மணப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுதாகர், மைக்கேல். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்களுக்குச் சுடர்விழி, சுருதி, ரோகித் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், மூன்று குழந்தைகளும் வீட்டின் அருகே உள்ள தடுப்பணையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தடுப்பணை உடைந்துள்ளது. இதனால் குழந்தை ரோகித் குட்டையில் விழுந்துள்ளான். இவனை மீட்பதற்காக சுடர்விழி, ரோகித் இருவரும் முயற்சி செய்தபோது, அவர்களும் குட்டையில் விழுந்துள்ளனர்.

பின்னர், விளையாடச்சென்ற குழந்தைகள் வீட்டிற்கு வரவில்லையே என பெற்றோர் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது மூன்று குழந்தைகளும் குட்டையில் மூழ்கி இறந்துகிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த ஐந்து மாதத்திற்கு முன்புதான் ரூ.15 லட்சம் மதிப்பில் இந்தத் தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால் அ.தி.மு.கவினரால் தரமற்ற முறையில் தடுப்பணை கட்டப்பட்டதால் தற்போது மூன்று குழந்தைகளைப் பறிகொடுத்து நிற்பதாகப் பெற்றோர்களும் அப்பகுதி மக்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: “வெல்லம் விற்றவரும், டீ விற்றவரும் கூட்டு சேர்ந்து நாட்டை விற்கப்போகிறார்கள்” - விளாசும் பஞ்சாப் விவசாயி!