Tamilnadu

“முழு ஊரடங்கு இல்லை; மினி ஊரடங்குதான்” : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுகாதாரத்துறை !

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து 400க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது. தொடர்ந்து குறைந்து வந்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் மிக மோசமாக இருந்துவருகிறது.

மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்றி வேகமாக பரவியதை தொடர்ந்து பள்ளிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதையடுத்து கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகளுக்கு பதில், மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடரலாம் என தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 1,636 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 600க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று தொடர்ந்து வேகமெடுத்து வருவதால், மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ? என கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொற்றைக் கட்டுப்படுத்த, குறிப்பிட்ட தெரு, வீடு, பகுதிகளில் மட்டும் ஊரடங்கைச் செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், முழு ஊரடங்கு என சொல்லப்படுவதை யாரும் நம்ப வேண்டாம்.

கொரோனா தொற்று அதிகம் பரவுவதால், பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல், கட்டாயம் முகக்கவும் அணியவேண்டும். தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதோடு, தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும். அதிகரித்து வரும் கொரோனாவை எதிர்கொள்ளக் கூடுதல் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

Also Read: மறியல் போராட்டத்தில் பங்கேற்றவரை 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்த போலிஸார் !