Tamilnadu

மறியல் போராட்டத்தில் பங்கேற்றவரை 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்த போலிஸார் !

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் ரமேஷ். இவர் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கலந்துக்கொண்ட போது, பொதுச் சொத்துகளை சேதம் விளைவித்ததாகக் கூறி, ரமேஷ் மீது நாகப்பட்டினம் போலிஸார் வழக்கப்பதிவு செய்தனர்.

இதனிடையே வேலைக்காக வெளிநாடு சென்ற ரமேஷைச் தேடப்படும் குற்றவாளியாக நாகை மாவட்ட எஸ்.பி அறிவித்திவிட்டார். மேலும், அனைத்து விமான நிலையங்களுக்கும் அவரை பற்றிய விபரங்களை கொடுத்திருந்தார்.

இந்நிலையில், ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு ரமேஷ் வந்துள்ளார். அவரை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது தேடப்படும் குற்றவாளி பட்டியலில் ரமேஷ் பெயரும் இடம் பெற்றுள்ளதால் அவரை ஒரு தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர்.

பின்னர், நாகை மாவட்ட எஸ்.பிக்கு தகவல் கொடுக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, தனிப்படை போலிஸார் சென்னை சர்வதேச விமான நிலையத்து சென்று ரமேஷை போலிஸார் கைது செய்து நாகப்பட்டினத்துக்கு அழைத்து சென்றனர்.

பல கோடி ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்காத வேளையில், நாகப்பட்டின போலிஸாரின் இத்தகைய நடவடிக்கை சர்ச்சையாக மாறியுள்ளது.