Tamilnadu

கேள்வி கேட்ட சிறுமியால் எரிச்சல்: பெற்றோரை மிரட்டிய விஜயபாஸ்கர்? - விராலிமலையில் பரபரப்பு! (வீடியோ)

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தி.மு.க, அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் அ.தி.மு.கவினர் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம், “10 வருடமாக ஆட்சியில் இருந்து எதுவும் செய்யாமல், இப்ப ஓட்டு கேக்க வந்துட்டீங்களா?” என அ.தி.மு.க வேட்பாளர்களை பொதுமக்களே விரட்டியடிக்கின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். இதனால் தொகுதி முழுவதும் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்துவருகிறார்.

இந்நிலையில், பிரச்சாரம் செய்வதற்காக விஜயபாஸ்கர் ஒரு கிராமத்திற்குச் சென்ற போது, சிறுமி ஒருவர் எங்கள் தொகுதியில், சுடுகாட்டிற்குச் செல்ல சாலை வசதியில்லை, குடிநீர் வசதியில்லை என கேள்வி எழுப்பினார். இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர் விஜயபாஸ்கர், மூன்று நாட்களாக நான் எல்லா ஊர்களுக்கும் சென்று வருகிறேன். இது போன்று யாரும் கேள்வி கேட்கவில்லை என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

மேலும், சிறுமியின் பெற்றோரைப் பார்த்து, குழந்தையைத் தவறாக வளர்த்துள்ளீர், நல்லவர் யார்? கெட்டவர் யார் என்று தெரிந்து பேசவேண்டும் என மிரட்டுவதுபோல் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

Also Read: மைக்கை தூக்கிவீசிய விஜயபாஸ்கர்: அ.தி.மு.கவை மக்கள் தூக்கிவீசும் காலம் நெருங்குவதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்!