Tamilnadu

"அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகளை பா.ஜ.க-வே அழித்துவிடும்" : திருமாவளவன் பேச்சு!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணியில் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து போட்டியிடும் எஸ்.எஸ்.பாலாஜியை ஆதரித்து, தொல்.திருமாவளவன் திருப்போரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது தொல்.திருமாவளவன் பேசுகையில், "அ.தி.மு.க இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டாலும், பா.ம.க மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டாலும் அவர்கள் அடிப்படையிலே பா.ஜ.கவின் பினாமி என்பதை மறந்து விடக்கூடாது. கூட்டணியிலிருந்து கொண்டே குழி பறிக்கும் திறமை கொண்டவர்கள் பா.ஜ.கவினர். பா.ஜ.கவின் பாசிசப் போக்கை எதிர்க்க வேண்டுமா தி.மு.கவுடன் இணைந்து செயல்படுங்கள், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமா தி.மு.க உடன் இணைந்து செயல்படுங்கள்.

தமிழகத்தில் அ.தி.மு.கவை அழிக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் திட்டம். இதேநிலைதான் கூடிய விரைவில் பா.ம.கவுக்கும் வரும். இட ஒதுக்கீடு உனக்கு இல்லை என அனைத்தையும் தனியார்மயப்படுத்துவதால் பாதிக்கப்படப் போவது யார்?

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தருவதாக அ.தி.மு.க அரசு அறிவித்துள்ளது. ஆனால் அரசுத் துறையும், பொதுத்துறையும் தனியார்மயமாகிவிட்டால், எப்படி இட ஒதுக்கீடு கிடைக்கும்? தமிழகத்தைப் பாசிச சக்திகளிலிருந்து பாதுகாக்கக் கூடிய திறமை தி.மு.கவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மட்டும்தான் உண்டு" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் சேர்ந்து கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை இதோ” - கையோடு கொண்டுவந்த உதயநிதி ஸ்டாலின்!