Tamilnadu

"வரதட்சணை கொடுமையால் பெற்ற குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்” - மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்!

மயிலாடுதுறையை அடுத்த மேலமுடுக்கு தெருவில் வசித்து வரும் பார்த்திபன், ரயில்வேயில் தற்காலிக பெயின்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வக்குமாரி. இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் லிபிஷா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், பார்த்திபனுக்கு விருதுநகருக்கு பணி மாறுதல் கிடைத்துள்ளது. இதனால் அவர் அங்கு சென்றுவிட்டார். இதையடுத்து, பார்த்திபனின் தாயார் தனலட்சுமி, செல்வக்குமாரியிடம் 25 பவுன் நகையை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் வேதனையடைந்த செல்வக்குமாரி, கடந்த 15ம் தேதி தனது அண்ணன் செல்வராஜூக்கு போன் செய்து சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் செல்வக்குமாரிக்கும், மாமியார் தனலட்சுமிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த செல்வக்குமாரி தனது அறைக்குள் குழந்தையுடன் சென்று பூட்டிக்கொண்டுள்ளார். பிறகு நீண்ட நேரமாகியும் செல்வக்குமாரி வெளியே வரவில்லை.

இதனால், தனலட்சுமி அறையின் கதவை நீண்ட நேரமாகத் தட்டியுள்ளார். ஆனால், செல்வக்குமாரி கதவைத் திறக்கவில்லை. இதனால் அருகில், வசிப்பவர்களின் உதவியுடன் கதவை உடைத்து அறைக்குள் சென்று பார்த்தபோது, செல்வக்குமாரி மின்விசிறியில் தூக்கிட்ட நிலையிலிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், குழந்தை லிபிஷா காதில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தது.

இதுகுறித்து செல்வக்குமாரியின் அண்ணன் செல்வராஜ், தன் தங்கையிடம் அவரது மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், தனலட்சுமி, பார்த்திபன் ஆகியோரை போலிஸார் நேற்று கைது செய்தனர். மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: பொள்ளாச்சி துயரத்தின் இரண்டாமாண்டு : மீண்டும் போட்டியிடும் ஜெயராமனுக்கு முடிவுகட்ட காத்திருக்கும் மக்கள்!