Tamilnadu

“இறந்தவர்களுக்கு மீண்டும் வாக்கு” : தோல்வி பயத்தால் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்த அமைச்சர் சரோஜா!

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தி.மு.க, அ.தி.மு.க கூட்டணிகள் தொகுதி பங்கீடுகளை முடித்து வேட்பாளர்கள் அறிமுகம், தேர்தல் பரப்புரை என தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

முன்னதாக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம்களை நடத்தியது. பின்னர் மாவட்ட ஆட்சியாளர்கள் அந்தந்த மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல்களை வெளியிட்டனர்.

இந்நிலையில், தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதியில் அதிகாரிகள் உதவியுடன் அ.தி.மு.கவினர் வாக்காளர் பட்டியலில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை சேர்த்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ராசிபுரம் நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும், இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் ராசிபுரத்தில் உள்ள 27 வார்டுகளிலும் அ.தி.மு.கவினரின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை மூன்று முகவரியில் இடம்பெறச் செய்துள்ளனர்.

இதையடுத்து, 80 வயதுடையவர்களுக்கே தபால் வாக்கு என்பதால் குறைந்த வயது கொண்ட பலரின் வயதை அதிகரித்து தபால் வாக்கில் அ.தி.மு.கவினர் சேர்த்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது இவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் எப்படி வந்தது என தி.மு.கவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சரோஜா வெற்றி பெற்றார். தற்போது இந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு தி.மு.க-வுக்கே என்பதால், அதிகாரிகள் உதவியுடன் வாக்காளர் பட்டியில் அமைச்சர் சரோஜா போலி வாக்காளர்களைச் சேர்த்துள்ளார். போலி வாக்காளர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த நிலையில் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக தி.மு.கவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: ‘உன்னை என்ன செய்றேன் பாரு..' : தேர்தல் அதிகாரியை மிரட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜு!