Tamilnadu

“அவரை நினைத்து நான்...” : இனமான பேராசிரியர் குறித்து முத்தமிழறிஞர் கலைஞர்!

கல்கி இதழுக்கு முத்தமிழறிஞர் அளித்த பேட்டியின் ஒருபகுதி வருமாறு :-

கேள்வி : உங்கள் சமகாலத்திய இயக்கத் தோழர்களில் யாரைக்கண்டு பெருமைப்படுகிறீர்கள்? யாரைக்கண்டு வருத்தப்படுகிறீர்கள்?

கலைஞர் : பேராசிரியர் அன்பழகனைக் கண்டு பெருமைப்படுகிறேன். நாவலர் நெடுஞ்செழியனைக்கண்டு வருத்தப்படுகிறேன். நாவலர் இலக்கியம் படித்தவர். சங்க இலக்கியங்களை எல்லாம் ஆராய்ந்தவர். நல்ல பேச்சாளர். அண்ணாவே அவரைப் பார்த்து “தம்பி..வா! தலைமை ஏற்க வா! ஆணை கேட்டு நடக்கக் காத்திருக்கிறோம் வா” என்று அழைத்தார். அப்படிப்பட்ட நாவலர் இந்த நிலைமைக்குப் போய்விட்டாரே என்கிற வருத்தம் எனக்கு.

கேள்வி : பேராசிரியரைக் கண்டு நீங்கள் பெருமைப்படுவதற்கான விஷயம் என்ன?

கலைஞர் : அறிஞர் அண்ணா சென்னைக்கு வந்தால், பெரும்பாலும் பேராசிரியர் வீட்டில் தான் தங்குவார். நான், நாவலர், சம்பத் எல்லோரும் அங்கு தான் அண்ணாவிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டோம்.

கட்சிக்கு எத்தனையோ, சோதனைகள் வந்தபோதும் கூட, கட்சி, கொள்கை என்பதில் சிறிதளவும் மாறுதல் இல்லாமல் இருப்பவர். எம்.ஜி.ஆர். காலத்தில் அவரை அழைத்தார்கள். அவர் விரும்பியிருந்தால் அவர் அங்கு சென்று பதவி வகித்திருக்கலாம்.

ஆனாலும் இம்மியும் மாறாமல் இருந்தார். என்னோடு கூட அவருக்குச் சில அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும், அவர் எனக்காக இல்லாமல், கட்சிக்காக என்னோடு இருக்கிறார். அதனால் தான் அவரை நினைத்துப் பெருமைப்படுகிறேன்”

- கல்கியில் வெளியான பேட்டியிலிருந்து ஒரு பகுதி.

Also Read: ‘தமிழ்நாடு’ என்ற பெயருக்காக பொங்கி எழுந்த பேராசிரியர் : 1960ல் சட்டசபையை அதிரச் செய்த பேராசிரியரின் உரை!