Tamilnadu

'Anti RSS' புத்தகத்தோடு புகைப்படம் எடுத்து எச்.ராஜாவுக்கே விபூதி அடித்த இளைஞர்!

சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவை சந்தித்த இளைஞர் ஒருவர், ‘ஆர்.எஸ்.எஸ் - இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்’ எனும் புத்தகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பா.ஜ.க-வையும், ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் செயற்பாட்டாளர்களையும், பத்திரிகையாளர்களையும் 'தேச விரோதிகள்' என விமர்சிக்கும் எச்.ராஜாவுக்கே விபூதி அடித்துள்ளார் ராஜா பிரபாகரன் எனும் அந்த இளைஞர்.

ஏனெனில், புத்தகக் காட்சியில் எச்.ராஜாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ராஜா பிரபாகரன் கையில் வைத்திருந்த ‘ஆர்.எஸ்.எஸ் - இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்’ எனும் புத்தகம் “இந்துவாக இல்லாதவன் தேசவிரோதி” எனக் குறிப்பிட்டு ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்கும் பாசிச செயல்பாடுகளைப் புட்டுப்புட்டு வைக்கும் நூல்.

‘ஆர்.எஸ்.எஸ். இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்' புத்தகம் நிமிர் வெளியீடாக 2019ல் விற்பனைக்கு வந்துள்ளது. இப்புத்தகம் பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கங்களையும், தீவிரவாத எண்ணத்தையும் அலசுகிறது.

ஆர்.எஸ்.எஸ் எப்படி இந்து தீவிரவாதத்தைக் கட்டமைக்கிறது என்பது குறித்த கட்டுரையும், சிறுபான்மையினர் ஆர்.எஸ்.எஸ்-ஆல் வேட்டையாடப்படுவது பற்றிய கட்டுரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ அமைப்புகள் நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்முறையைச் செயல்படுத்தி வருவது குறித்து இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. கலவரங்களை எப்படி உருவாக்குவது, எப்படி திசைதிருப்புவது, கலவரம் முடிந்ததற்கு பிறகு எவ்வாறு வழக்குகளைக் கையாள வேண்டும் போன்ற அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் செயல்படுவது குறித்து இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிரான புத்தகத்துடன் இளைஞர் ஒருவர் எச்.ராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

Also Read: சுயமரியாதையை சீண்டியதால் வெளியேறுகிறது தே.மு.தி.க? ‘அ.தி.மு.க கூட்டணிக்கு கல்தா’- சமிக்ஞை கொடுத்த சுதீஷ்!