Tamilnadu

மின்வாரியத்தின் கேங்மேன் பணி நியமனத்தில் முறைகேடு : ஆட்சி முடிவுறும் நேரத்தில் அவசர அவசரமாக வசூல்?

தமிழ்நாடு மின் வாரியம், ‘கேங்மேன்’ பணிக்கு 15 ஆயிரம் பேரை நியமிக்க உள்ளது. இதற்காக 9,613 பேருக்கு, கடந்த திங்கட்கிழமை இரவு பணி நியமன ஒதுக்கீட்டு ஆணை அவசர அவசரமாக மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது. இந்நிலையில், கேங்மேன் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

‘கேங்மேன்’ பணிகளுக்கான பணி நியமன ஆணை எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதை வெளியிடக் கோரி, நூற்றுக்கணக்கான தேர்வர்கள் சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் குவிந்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தமிழ்நாடு மின் வாரிய கேங்மேன் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறி இன்று சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லம் அருகே 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

15,000 பணியிடங்களில் 10,000 பணியிடங்கள் அவசர அவசரமாக பணம் வாங்கிக்கொண்டு நிரப்பப் பட்டதாகவும், 5 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர் பணியில் ஈடுபட்டுள்ள தங்களை அரசு புறக்கணித்துவிட்டதாகவும் பலர் வேதனை தெரிவித்தனர்.

கேங்மேன் பணி நியமன ஆணை வழங்கப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தகுதியானவர்களுக்கு மின்வாரியத்தின் கேங்மேன் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Also Read: “தி.மு.கவை விமர்சிக்க மோடிக்கு உரிமை இல்லை”: பா.ஜ.க ரவுடிகளின் பட்டியலை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் விளாசல்!