Tamilnadu

குழந்தையில்லாததால் ஆத்திரம்.. கட்டிய மனைவியை குத்திக்கொன்று தப்பி ஓடிய கணவர்.. சென்னையில் பகீர் சம்பவம்!

பூந்தமல்லி, சுமித்ரா நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் மாங்காட்டில் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். பன்னீர்செல்வம், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு 4 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மன வேதனையிலிருந்த கீர்த்தனா, சில தினங்களுக்கு முன்பு, பெற்றோரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இதையடுத்து, கணவர் பன்னீர் செல்வம் அவரை பார்க்க வந்துள்ளார். பின்னர் இருவரும் மாடியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த பன்னீர்செல்வம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கீர்த்தனாவின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் அலறியபடி மயங்கிய விழுந்தார். பிறகு பன்னீர்செல்வம் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்

கீர்த்தனாவின் அலறல் சத்தம் கேட்டு மாடிக்கு வந்த பெற்றோர், மகள் ரத்த வெள்ளத்தில் இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கீர்த்தனா இன்று உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனால் ஆர்.டி.ஓ. விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Also Read: அதிகாரிகளின் அலட்சியம்; பிப்ரவரி 30 இறப்பு சான்றிதழ்... வட்டாட்சியர் அலுவலகத்தின் கூத்து!