Tamilnadu

விளம்பரத்திற்கு கோடிகோடியாக கொட்டும் அ.தி.மு.க அரசிடம் தூய்மைப் பணியாளருக்கு சம்பளம் கொடுக்க பணமில்லையா?

மதுரை மாவட்டம், வண்டியூர், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். மேலும் கடந்த சில மாதமாக மாவட்ட ஆட்சியர் ஆவலவலகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பகல் முழுவதும் ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வேலை முடிந்தவுடன், வீட்டிற்குச் செல்லாமல், ஆட்சியர் அலுவலகத்திலேயே தங்கியுள்ளார். இதையடுத்து நேற்று பாதுகாப்புப் பணிக்கு வந்த காவல்துறையினர் ஆட்சியர் அலுவலக மாடிக்குச் சென்றுள்ளனர். அப்போது, வேல்முருகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், இது குறித்து தல்லாகுளம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த காவல்துறையினர் வேல்முருகனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேல்முருகனுடன் பணியாற்றிய, மற்ற தூய்மைப் பணியாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்த வேல்முருகனுக்கு கடந்த 8 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை, இதனால் இவரின் குடும்பம் வறுமையில் வாடியதால் என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்து கொண்டதாக இவருடன் பணியாற்றியவர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் நெருங்குவதால் விளம்பரங்களுக்கு கோடி கோடியாகச் செலவழிக்கும் அ.தி.மு.க அரசு வேல்முருகனுக்கு மாதாமாதம் ஊதியம் கொடுத்திருந்தால், இந்த விபரீத முடிவு எடுக்காமல் இருந்திருப்பார். மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அ.தி.மு.க அரசின் அலட்சியமே வேல்முருகனின் தற்கொலைக்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: “8 மாதங்களாக சம்பளம் வழங்காத அரசால் மதுரையில் தூய்மைப் பணியாளர் தற்கொலை” - மு.க.ஸ்டாலின் வேதனை!