Tamilnadu

குழந்தை பிறக்காததால் மன விரக்தியில் விபரீத முடிவெடுத்த இளம்பெண் : திருவள்ளூரில் சோகம்!

திருவள்ளூர் மாவட்டம், வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. அதேபோல திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட புங்கத்தூரைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர்கள் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்தத் தம்பதிக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும், குழந்தை இல்லாததால் புவனேஸ்வரி வெள்ளியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கருத்தரிப்பதற்கான சிகிச்சையை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம், புவனேஸ்வரி கர்ப்பமாகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சசிகுமாரும் புவனேஸ்வரியும் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்தச் சூழலில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று புவனேஸ்வரிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மன விரக்தியில் இருந்த புவனேஸ்வரி, சம்பவத்தன்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் சசிகுமாரும் குடும்பத்தினரும் இதுகுறித்து வெங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் புவனேஸ்வரியின் சடலத்தைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: மாவட்ட ஆட்சியருக்கு மரண வாக்குமூல கடிதத்தில் கோரிக்கை வைத்த விவசாயி : கோவை அருகே சோகம்!