Tamilnadu

குடிபோதையில் மனைவியை எரித்துக் கொன்ற கொடூர கணவன் - அறந்தாங்கி அருகே அதிர்ச்சி சம்பவம்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள குமாலாங்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் 13 ஆண்டுகளாகத் துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தனது சொந்த ஊருக்கே திரும்பி வந்துவிட்டார்.

இந்நிலையில், தனது தாய்மாமன் மகள் அமிர்தவள்ளியை காதலித்து, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் சேகர், குடிபோதைக்கு அடிமையாகியுள்ளார். மேலும் எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு குடித்துவிட்டு வந்த சேகர், வழக்கம்போல் அமிர்தவள்ளியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த சேகர், வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து மனைவி மீது ஊற்றியிருக்கிறார். அமிர்தவள்ளி சுதாரிப்பதற்குள், சேகர் லைட்டரால் அவர் மீது பற்றவைத்துள்ளார்.

இதனால் தீ மளமளவென அமிர்தவள்ளியின் உடல் முழுவதும் பரவியது. இதனால் வலியில் அலறித் துடித்திருக்கிறார். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து, அமிர்தவள்ளியில் மீது எரிந்த தீயை அணைத்து, அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 50 சதவிகித தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த அமிர்தவள்ளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கணவர் சேகரை கைது செய்தனர். திருமணமாகி இரண்டே ஆண்டுகள் ஆகிறது என்பதால் இந்த வழக்கு கோட்டாட்சியர் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Also Read: “இருப்பது ஒரு டி.வி; ஒரு மின்விசிறி; மின் கட்டணமோ 1 லட்சத்து 50 ஆயிரம்” : அதிர்ச்சியில் விவசாயி தற்கொலை!