Tamilnadu

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக மாட்டு வண்டியில் சென்று திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினர்

கன்னியாகுமரி மாவட்டம், அயக்கோடு ஊராட்சிக்குட்பட்ட மலவிளை பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட். இவரின் மகன் விஜூ. இவர் வெளிநாட்டில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் ஜெய ஷாமிலிக்கும், விஜூக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதையடுத்து விஜூ - ஜெய ஷாமிலிஆகியோரது திருமணம், மலவிளையை அடுத்த பெனியல் சி.எஸ்.ஐ தேவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு மணமகன் விஜூ, மாட்டு வண்டியில் தேவாலயத்திற்கு வந்து ஜெய ஷாமிலியை கரம் பிடித்தார். இந்த நிகழ்வு உறவினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர், திருமண நிகழ்ச்சிகள் முடிந்து, மணமக்கள் அதே மாட்டுவண்டியில் வீட்டிற்கு சென்றனர். உற்றார் உறவினர்கள் புடைசூழ மாட்டுவண்டியில் சென்ற தம்பதியரை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

இதுகுறித்து மணமகன் விஜூ கூறுகையில், “தமிழக பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் காளை மாடுகளை அழியாமல் பாதுகாக்கவும், டெல்லியில் 80 நாட்களுக்கு மேலாகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளுக்குப் பெரிதும் உதவும் காளை நினைவுகூரும் விதமாக, மாட்டு வண்டியில் சென்று திருமணம் செய்துகொண்டேன்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

திருமணம் என்றாலே ஆடம்பரமாகிவிட்ட இந்த காலத்திலும், சிலர் புதுமையாக ஏதாவது ஒன்றை செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த வகையில், கார்களின் அணிவகுப்பு என்ற காலம் போய் முன்னோர்களின் வழியான மாட்டுவண்டி, குதிரை வண்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “பாலின சமத்துவத்தை பாதுகாக்கும் கேரளா” : ‘Gender Park’ திட்டத்தை தொடங்கி வைத்த பினராயி விஜயன் !