Tamilnadu

திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய முன்னாள் காதலி - காதலன் தற்கொலை!

சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கடைகளுக்கு சிகரெட் விநியோகம் செய்யும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் ஒருவருடமாக காதலித்து வந்த நிலையில், அந்தப் பெண்ணின் நடத்தையில் சதீஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் திருத்திக்கொள்ளும்படி காதலியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும், அவரின் நடத்தையில் மாற்றம் ஏற்படாததால், தனது காதலியிடம் இருந்து விலகியிருக்கிறார் சதீஷ்குமார்.

இந்நிலையில் அந்தப் பெண், தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென சதீஷ்குமாரை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், சதீஷ்குமார் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் காதலி, தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என சதீஷ்குமாரை மிரட்ட தொடங்கியதாக கூறப்படுகிறது.

இதனால், சதீஷ்குமார் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ளோர் இது குறித்து குன்றத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: நகைச்சீட்டு என்ற பெயரில் நூதன மோசடி : வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.40 கோடியை சுருட்டிய நகைக்கடை!