Tamilnadu

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் மரணத்தை கொச்சைப்படுத்துகிறதா எடப்பாடி அரசு? - மருத்துவர்கள் ஆவேசம் !

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றிய முதுநிலை மருந்துவ மாணவர் லோகேஷ் குமார் மரணத்தை அ.தி.மு.க அரசு மூடி மறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேட்டூர் வனவாசியைச் சேர்ந்த லோகேஷ் குமார் (24) சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்து முதுநிலை மருத்துவம் முதலாமாண்டு படித்து வருகிறார். கொரோனா வார்டில் பணியாற்றிய இவர் கடந்த அக்டோபர் 14ம் தேதி தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 25ம் தேதி விடுதி ஊழியருடன் தொலைபேசியில் பேசியதற்குப் பின்னர் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மாமா கார்த்திக் என்பவர் ஓட்டல் நிர்வாகத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியதின் பேரில் நேற்றிரவு 11 மணிக்கு ஓட்டல் ஊழியர்கள் மற்றொரு சாவியைக் கொண்டு அறையைத் திறந்து பார்த்தபோது லோகேஷ் குமார் வாந்தி எடுத்த நிலையில் படுக்கையில் இறந்து கிடந்துள்ளார்.

Also Read: கொரோனா வார்டில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவர் ‘மர்ம’ மரணம் : பணிச்சுமை தாளாமல் தற்கொலையா?

இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ முதலாம் ஆண்டு மாணவர் லோகோஷ் குமார் மர்ம மரணம் குறித்து நேர்மையான, வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனையடுத்து லோகோஷ் குமார் மரணம் தொடர்பாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிகிறது. ஆனால், இத்தகைய மரணம் குறித்த தகவல் வெளியே வந்தால் ஆளும் கட்சிக்கு தேர்தல் நேரத்தில் அவபெயர் ஏற்படும் என்பதால், மருத்துவர் லோகோஷ் குமார் மரணம் தொடர்பான தகவலை வெளியில் சொல்லக்கூடாது என சென்னை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் துறைத் தலைவர்கள் சக மருத்துவர்களை வழியுறுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மருத்துவர் லோகோஷ் குமார் மரணம் குறித்த ஆவணங்களை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் அல்லாத மருத்துவ நிபுணர் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அவரது மரணத்தை கொரோனா மரணமாக ஏற்று , இழப்பீடு வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழகத்தில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்ற நிர்பந்திப்பதா? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!