Tamilnadu

“ஆசையாக வாங்கிய ஆடுகள் அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்” : இறந்த ஆட்டுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த இளைஞர் !

மதுரை மாவட்டத்தில் வாரம்தோறும் ஆட்டுச் சந்தை நடைபெறும். அந்த வகையில் கடந்த வாரம் நடைபெற்ற ஆட்டு விற்பனை சந்தையில் ஜெயராமன் என்ற இளைஞர் வேலை செய்ய பணத்தை சேர்த்து வைத்து ஆசையாக 8 ஆடுகள் வாங்கியிருக்கிறார். இந்த ஆடுகள் திடீரென அடுத்தடுத்து உயிரிழந்தைத் தொடர்ந்து, இறந்த ஆட்டை எடுத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விற்பனையாளர் மீது புகார் அளிக்க வந்துள்ளார்.

அப்போது, இந்த புகார் குறித்து ஜெயராமன் கூறுகையில், “ஆட்டுச் சந்தைகளில் அதிக லாபத்திற்காக ஆடுகளுக்குத் தண்ணீரை வயிற்றுக்குள் வலுக்கட்டாயமாகச் செலுத்தப்படுவதால் ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துவிடுகிறது. தான் வாங்கிய 8 ஆடுகளும் அதேபோல் உயிரிழந்துவிட்டன.

பணம் கொடுத்து ஆசையாக வாங்கிய ஆடுகள், வியாபாரிகளின் லாபவெறியால் பரிதாபமாக உயிரிழப்பதை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் இறந்த ஆடுகளை எடுத்துக்கொண்டு புகார் கொடுக்க வந்தேன். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் ஆட்டுச் சந்தையில் நடக்கும் மோசடிகளையும் தடுக்க அரசு முன்வரவேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் ஜெயராமனிடம் நடந்தவற்றை கேட்டறிந்தனர். மேலும் இந்த மோசடி குறித்து திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்க போலிஸார் அவரிடம் கூறினார்கள். இதனையடுத்து ஜெயராமன் திருமங்கலம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “தொடரும் தீண்டாமை கொடுமை” : தலித் இளைஞர் அடித்து கொலை - கோவையில் நடந்த கொடூர சம்பவம் !