Tamilnadu

“மத வன்முறையைத் தூண்ட முயற்சி” - பா.ஜ.க நிர்வாகி கல்யாண்ராமன் குண்டர் சட்டத்தில் கைது!

நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசி மத வன்முறையைத் தூண்டிய பா.ஜ.க பிரமுகர் கல்யாண்ராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைதான பா.ஜ.கவைச் சேர்ந்த கல்யாண்ராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க நிர்வாகி கல்யாண்ராமன், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து, மத வன்முறையைத் தூண்ட முயன்ற கல்யாண்ராமன் மீது தேசிய ஒருமைபாட்டை சீர்குலைக்க முயற்சித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கல்யாண்ராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.