Tamilnadu

தமிழகத்தில் தி.மு.கதான் ஆட்சிக்கு வரும் என்பதால் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: திமுக MPக்கள் கண்டனம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட்டை மூன்றாவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்தாண்டும் எழை எளிய மக்களுக்கு ஏற்றவகையிலான பட்ஜெட்டை மோடி அரசாங்கம் தாக்கல் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக முன்னைவிட கூடுதலாக அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் பட்ஜெட்டை தயார் செய்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு தி.மு.க எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, 5 மாநில தேர்தலை மனதில் கொண்டு வெளியிட்ட பட்ஜெட்டில், தமிழகத்தில் தி.மு.க தான் ஆட்சிக்கு வரும் என்பதை தெரிந்து கொண்டு தமிழகத்திற்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக, தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஐந்து மாநிலத் தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு பட்ஜெட்டை வெளியிட்டிருந்தாலும் தமிழகத்திற்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

எட்டு வழிச் சாலை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று ஒருபக்கம் விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் கையாலாகாத அரசு இருப்பதன் காரணமாக அந்தத் திட்டத்தை செயல்படுத்த இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, எல்.ஐ.சி பங்குகளை விற்பது என்பவை மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும். மேலும், இது சாதாரண மக்களை புறக்கணிக்கும் பட்ஜெட் ஆகவே இந்த இந்த பட்ஜெட் உள்ளது.

குறிப்பாக, 5 மாநில தேர்தலை மனதில் கொண்டு வெளியிட்ட பட்ஜெட்டில், தமிழகத்தில் தி.மு.க தான் ஆட்சிக்கு வரும் என்பதை தெரிந்து கொண்டு தமிழகத்திற்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அதேப்போல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் மூலம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தி.மு.க எம்.பி. திருச்சி சிவா கூறுயுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி கூறுகையில், “பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசின் பட்ஜெட் அறிவிப்பு கண்டனத்துக்குறியது. 5 மாநில தேர்தலை மனதில் வைத்து மட்டுமே செயல்படுத்த முடியாத அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிட்டிருக்கிறார்கள்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் மூலம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விவசாயக்கடன், மாணவர்களுக்கான கல்விக்கடன் தள்ளுபடி என்று எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “இந்தியா விற்பனைக்கு” : கார்ப்பரேட்களுக்கு பச்சைக் கம்பளம் விரித்த நிர்மலா சீதாராமனின் 2021 பட்ஜெட்!