Tamilnadu

“4 மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?”: திமுக MLA கேள்வி!

தமிழக மீனவர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள அரசை கண்டித்தும் அதை தட்டிக் கேட்கத் தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை திருவான்மியூர் தெற்கு மாட வீதியில் தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ, தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த போராட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ், சைதை மேற்கு பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வேளச்சேரி கிழக்குப்பகுதி செயலாளர் துரை கபிலன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் மா.அன்பரசன், ஸ்ரீதரன், இளைஞரணி அமைப்பாளர் பிரபாகர் ராஜா, மாநில மீனவர் அணி அமைப்பாளர் பரிமேலழன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சென்னை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள 13 மீனவ குடியிருப்புகளை சார்ந்த ஏராளமான மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்ரமணியம், கழகத் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் உயிரிழந்த மீனவர்கள் மரணத்திற்கு நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருவதாகவும், மோடி அரசு தமிழகத்தை தனி நாடாக பார்க்கிறது எனவே தான் தமிழகத்திற்கு முறையாக நிதி ஒதுக்கவில்லை, தமிழகத்தில் எந்த பிரச்சினைகளும் குரல் கொடுப்பதில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும் நான்கு, மீனவர்கள் உயிரிழப்பு விபத்து என இலங்கை அரசு தெரிவித்து வரும் நிலையில், தொடர்ந்து இந்திய அரசு அதை மறுக்காமல் மௌனம் காத்து வருவதாகவும், மத்திய அரசிற்கும் இலங்கை அரசிற்கும் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தமிழக அரசு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மீனவர் துறை சார்ந்த அமைச்சர் ஜெயக்குமார் இதுவரை எந்தவித எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியம், தி.மு.க ஆட்சி காலத்தில் கட்டிய கட்டிடங்களுக்கு ஜெயலலிதா பெயரை வைப்பதும் அரசாங்க இடங்களில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைத்து வருகின்றனர் என தெரிவித்தார்.

Also Read: “சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும்” : அ.தி.மு.க அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டம் !