Tamilnadu

“ஓயாத சாதி ஆதிக்க கொடுமை : தலித் ஆசிரியரை காலில் விழ வைத்த கொடூரம்” : கள்ளக்குறிச்சியில் நடந்த அவலம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டையில் வசித்து வரும் வேல்முருகன் இவர் நெடுமானூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்.

இந்நிலையில் மாட்டுப் பொங்கலன்று இவர் வீட்டிற்கு முன்பாக மண் கொட்டி வைத்து இருந்ததாக சொல்லப்படுகிறது. அதை அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் உடனடியாக அகற்றுமாறு கூறியிருக்கிறார்கள். இதில் ஆசிரியருக்கும் கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு ஆசிரியரை தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்பு ஆத்திரம் அடங்காத அந்தக் கும்பல் ஊர் பஞ்சாயத்து போன்று தெருவில் கூடி நின்று ஆசிரியரை வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து அழைத்து வந்து ஊர் பெரியவர்களின் காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த ஆசிரியர் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்துள்ளார்.

ஆசிரியர் மனைவி சசிகலா தன் கணவரை பள்ளி ஆசிரியர் என்று பாராமல் பொது இடங்களில் தாக்கி காலில் விழ வைத்த மன்னிப்பு கேட்க வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் ஆசிரியர் மனைவி சசிகலா புகார் அளித்துள்ளார்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி ஆசிரியரை அடித்து பொது இடத்தில் காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்ததாக கூறி காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: அதிமுக பேனர்: நீதிமன்ற ஆணையை முதல்வரே தொடர்ந்து மீறுவது முறையா? - EPSக்கு திமுக எம்.எல்.ஏ சரமாரி கேள்வி!