Tamilnadu

“பா.ஜ.க அரசு தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக நினைக்காததே இந்த கொடுமைகளுக்கு காரணம்” : உதயநிதி ஸ்டாலின்

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், 4 மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீமிசல் கடற்கரையில் இருந்து கடந்த 18ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர்.

அன்று நள்ளிரவில் கச்சத்தீவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கடற்படை கப்பலை வைத்து படகு மீது மோதி கடலில் மூழ்கடித்தனர்.

அதில், படகில் இருந்த மெசியா (30), த/பெ அந்தோணி ராஜ், தங்கச்சிமடம், நாகராஜ் (52), த/பெ வெள்ளைச்சாமி, வட்டவளம் , உச்சபுளி, சாம் (28), த/பெ நேச பெருமாள், மண்டபம், மற்றும் செந்தில்குமார் (32), த/பெ செல்வம், உச்சிப்புளி, ராமேஸ்வரம் ஆகிய நான்கு மீனவர்கள் கடலில் மூழ்கிய நிலையில் தற்போது மூன்று மீனவர்களின் உடல்கள் இலங்கையில் கரை ஒதுங்கி உள்ளது. மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் 4 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தி, விசைப் படகோடு மூழ்கடித்துக் கொன்றிருப்பதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு மத்திய பா.ஜ.க அரசு தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக நினைக்காததே இந்த கொடுமைகளுக்கு எல்லாம் காரணம் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கோட்டைப்பட்டினத்திலிருந்து கடலுக்குச் சென்ற 4 மீனவர்கள் மாயமான நிலையில், இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் அவர்கள் நால்வரும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியம் கடும் கண்டனத்துக்குரியது.

“எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடிக்க முயன்றபோது, இலங்கை ரோந்து கப்பலில் மோதி தமிழக மீனவர் படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. மூழ்கிய படகின் பாகங்களும், சடலங்களும் கிடைத்தன' என இலங்கை அரசு ஜோடிக்கும் பொய்யை அடிமை அரசும் சொல்வது ஏன்?

நடுக்கடலில் தவித்த எத்தனையோ இலங்கை மீனவரை இந்திய கடற்படையும்,நம் மீனவரும் காப்பாற்றியுள்ளனர். ஒருவேளை, நம் மீனவரின் படகு சேதமாகியிருந்தால் இலங்கை கடற்படை காப்பாற்றியிருக்கலாமே. காப்பாற்ற சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தடுத்ததாக கரை திரும்பிய பிற மீனவர்கள் கூறுகின்றனர்.

மத்திய பா.ஜ.க அரசு தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக நினைக்காததே இந்த கொடுமைகளுக்கு எல்லாம் காரணம். தமிழக மீனவர்களின் மரணம் குறித்து இலங்கையிடம் இந்தியா உரிய முறையில் விசாரிப்பதோடு, இது மாதிரியான சம்பவங்கள் தொடராமல் இருக்க கடுமையாக எச்சரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழக மீனவர்கள் 4 பேரை மூழ்கடித்துக் கொன்று இலங்கை கடற்படையினர் அட்டூழியம்” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!