Tamilnadu

மது போதையில் ஜீப் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வடமாநில பெண்.. போலிஸாரிடம் தகராறில் ஈடுபட்டு அட்டூழியம்!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் நித்து. 21 வயது நிரம்பிய இவருக்கு நிகில் பாண்டே என்பவருடன் திருமணமாகி உள்ள நிலையில் இவர் திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாக பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சக நண்பர்களுடன் மணவாளநகர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இதில் பங்கேற்ற நித்து அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு தனது ஜீப்பை எடுத்துக்கொண்டு அவரே ஓட்டி வந்துள்ளார். ஜீப் கிளம்பிய சிறிது நேரத்தில் தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி துரைபாண்டியன் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். மது போதையில் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் உளறுவதுடன் என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் நண்பர்களிடம் செல்போனில் தகவலை சொல்லி வரவழைத்த காவல் துறையினர் அவரை பெற்றோரிடம் ஒப்படைக்க அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண் ஓட்டி வந்த ஜீப்பை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். நாளை காலை பெற்றோருடன் வந்த பிறகு விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர். இதனால் மணவாளநகர் பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: தமிழகத்தில் 2020ல் போதை பொருள் கடத்தல் 3 மடங்கு அதிகரிப்பு : எடப்பாடி ஆட்சியில் சீர்கெட்டுப்போன தமிழகம்!