Tamilnadu

“கன்டெய்னர் லாரி மோதி படுகாயம் அடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு” : ஒரே வாரத்தில் 2 யானைகள் பலி !

தமிழகத்தில் நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் தனது வலசுப் பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி நடந்து செல்லும் யானைகள் பல்வேறு விபத்துகளில் பலியாகும் சம்பவம் தொடர்கதையாகிறது.

குறிப்பாக, யானைகளின் வாழ்விட பரப்பு குறைவது, உணவுப் பற்றாக்குறை, நீர் மாசு, பூச்சிக்கொல்லிகள், சட்டவிரோத மின் வேலிகள், வேட்டை, ரயில் மற்றும் வாகன விபத்துகள், விவசாய பயிர்களை காக்க விவசாயிகள் கையாளும் தவறான உத்திகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் கோவையில் மின் வேலியில் சிக்கி ஒருயானை உயிரிழந்த நிலையில், இன்று லாரி மோதி மற்றொரு யானை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை ஆண் யானை சுற்றித் திரிந்து வந்ததாக வனத்துறையினருக்கு தகவல் வந்துள்ளனர்.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த யானையை உடனடியாக காட்டுக்கள் அனுப்பும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டதனால் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் பேரண்டப்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல முயன்றது.

அப்போது, பெங்களூரு நகரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி அதிகவேகத்தில் வந்துக் கொண்டிருந்த கன்டெய்னர் லாரி யானையின் மீது பலமாக மோதியது. இதில் யானை சம்பவ இடத்திலே யானை படுகாயமடைந்த நிலையில் சாலையில் விழுந்தது.

இதனையடுத்து தகவலறிந்து வந்த வன விலங்குகள் மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான கால்நடை மருத்துவக் குழுவினர், காயம டைந்த யானைக்கு முதல்கட்ட சிகிச்சை அளித்தனர். பின்னர், மாவட்ட வன அலுவலர் பிரபு ஆலோசனையின் பேரில் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர், படுகாயமடைந்த யானையை மீட்டு அய்யூர் காப்புக்காட்டுக்கு சிகிச்சை அளிக்க கொண்டு சென்றனர்.

அங்கு யானையை பரிசோதித்த மருத்துவர்கள், “யானையின் பின்பக்க வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது; இதனால், யானையால் எழுந்து நடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறது. கால் எலும்பு முறிவை சரி செய்வதற்கான சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்” என்றார்.

இதனிடையே யானை மோதிய கன்டெய்னர் லாரியின் ஓட்டுநரும் படுகாயமடைந்துள்ளதால், அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்ட ஆண் யானை தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. யானை உயிரிழந்த சம்பவம் வன விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “6 ஆண்டுகளில் 561 யானைகள் உயிரிழப்பு; கண்டுகொள்ளாத அ.தி.மு.க அரசு” : கொந்தளிக்கும் வனவிலங்கு ஆர்வலர்கள்!