Tamilnadu

நெல்லையில் நாளையும் கனமழை தொடரும்.. 22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை தகவல்!

தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

16.01.2021: தென்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17.01.2021: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

18.01.2021 மற்றும் 19-01-2021: தமிழகம் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும் , காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக நாகப்பட்டினம், ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்) தலா 9 செமீ, ராமநாதபுரம் 8 செமீ, திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), பாபநாசம் (திருநெல்வேலி), மண்டபம் (ராமநாதபுரம்) தலா 7 செமீ, மதுக்கூர் (தஞ்சாவூர்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), ராமேஸ்வரம், தலைஞாயிறு ( நாகப்பட்டினம்) தலா 6 செமீ , காயல்பட்டினம் (தூத்துக்குடி ) 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகிறது.