Tamilnadu

"பொங்கல் பரிசா? தேர்தல் பரிசா?” - தோல்வி பயத்தில் விராலிமலை தொகுதிக்கு வாரியிறைக்கும் விஜயபாஸ்கர்!

ஆட்சியில் இருக்கும் பத்தாண்டுகளாக மக்களுக்கு நல்லது எதுவும் செய்யாமல், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இலவசப் பொருட்களைக் கொடுத்து வாக்குகளைக் கவர திட்டம் தீட்டி வருகின்றனர் அ.தி.மு.க-வினர்.

கொரோனா ஊரடங்கினால் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5000 வழங்கவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தபோது ஏற்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தலைக் குறிவைத்து பொங்கல் பரிசாக ரூ. 2500 வழங்கப்படும் என அறிவித்தார்.

பொங்கல் பரிசு திட்டத்தை அரசின் செலவில் அ.தி.மு.க-வுக்கு விளம்பரம் செய்துகொள்ளும் வகையில் பயன்படுத்திய ஆளுங்கட்சியினர் நீதிமன்றத்தில் குட்டுப்பட்டனர். நீதிமன்றம் சொன்ன பிறகும் கூட ரேஷன் கடைகள் முன்பு வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அ.தி.மு.க-வினர் அகற்றவில்லை.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனது விராலிமலை தொகுதியில் தனியாக ஒரு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி வருகிறார்.

விராலிமலை தொகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு ‘நம்ம விஜயபாஸ்கர் வீட்டு சீர்’ என்ற பெயரில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

‘நம்ம விஜயபாஸ்கர் வீட்டு சீர்’ என்று விஜயபாஸ்கர் படத்தோடு அச்சிடப்பட்ட பையில் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேர்தல் காலத்தில் பொதுமக்களுக்கு அன்பளிப்புகள் தரக்கூடாது என விதி இருக்கும் நிலையில், முன்கூட்டியே கொடுத்து வருகிறார் விஜயபாஸ்கர்.

கடந்த தேர்தலின் போது தொகுதி மக்களுக்கு லட்சுமி விளக்கு வழங்கிய விஜயபாஸ்கர், இந்த தேர்தலுக்கு பொங்கல் பானை வழங்குகிறார் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க தோல்வி பயத்தில் அ.தி.மு.க-வினர் எந்த அளவுக்கும் இறங்குவார்கள் எனப் பேச்சுகள் கிளம்பியுள்ளன.

Also Read: “மக்களுக்கான நலத்திட்டங்களை கூட தேர்தலுக்காக பயன்படுத்தும் அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!