Tamilnadu

“மெரினாவை அழகுபடுத்துவதை விட மீனவர்கள் நலன், மனித உரிமைகளுமே முக்கியத்துவம் வாய்ந்தது” - ஐகோர்ட் கருத்து

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நாள்தோறும் ரூ. 500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடவும், முராரி கமிசன் பரிந்துரைகளை அமல்படுத்த உத்தரவிடக் கோரி மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பீட்டர்ராயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகர் லூப் சாலையை புணரமைப்பது, மீன் கடைகளை ஒழங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா, மீன்பிடித் தடைகாலத்தில் வழங்கப்படும் மானியத் தொகையை உயர்த்த கோரியும், முராரி கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தக் கோரியும் இந்த வழக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு தொடரப்பட்டது. ஆனால் வழக்கின் பிரதான கோரிக்கையை விடுத்து மெரினா கடற்கரையை அழுகுபடுத்துவதும், லூப் சாலை சீரமைப்பு உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், பிரதான கோரிக்கையை கருத்தில் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது அவசியம் என்றாலும், அதை விட மீனவர்களின் நலன் மற்றும் அவர்களுக்கான மனித உரிமைகளுமே முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவித்தனர்.

மேலும் மெரினாவில் 900 தள்ளுவண்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை பொங்கல் விடுமுறைக்குப் பின் ஒத்திவைத்தனர்.

Also Read: ஆன்லைன் கடன்: உரிமையாளர்களே விதிகளை வகுப்பது சட்ட விரோதம் - RBI, கூகுளுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்!