Tamilnadu

பொள்ளாச்சி வன்கொடுமை: அதிமுக நிர்வாகி உட்பட மூவர் கைது.. திமுக கூற்று நிரூபணம் - கனிமொழி எம்.பி ட்வீட்!

2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெண் ஒருவர் தன்னை சிலர் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, இந்த வழக்கில், வசந்த்குமார், சபரி ராஜன், சதீஸ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு 2019 மார்ச் மாதம் பிடிபட்டார். மணிவண்ணன் என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். விசாரணையில், இவர்கள் பல இளம் பெண்களை ஆசைவார்த்தை கூறி பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்தது தெரிய வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, பின்னர் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அதிமுக மாணவரணி நிர்வாகி அருளானந்தம், அவரது கூட்டளி பாபு மற்றும் ஹாரன் பால் ஆகிய 3 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரையும் ரகசிய இடத்தில் வைத்து சிபிஐ விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, திமுக தொடர்ந்து சொல்லி வந்துள்ளது. திமுகவின் கூற்று உண்மை என்பதை இன்று, அதிமுக மாணவர் பிரிவின் பொள்ளாச்சி நகர செயலாளரையும் மேலும் இரு அதிமுகவினரையும், சிபிஐ இவ்வழக்கில் கைது செய்துள்ளது உறுதி செய்துள்ளது.

எடப்பாடி அரசிடம் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தால் இந்த கைதுகள் நடந்திருக்குமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: பொள்ளாச்சி பாலியல் வழக்கு : சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம் - சென்னை உயர்நீதிமன்றம்