Tamilnadu

“நண்பர்களிடையே நடந்த மோதலில் உதவி இயக்குனர் குத்திக்கொலை”: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த சோகம்!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ருத்ரா(25). இவர், வளசரவாக்கத்தில் தங்கி சினிமா துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று புத்தாண்டு பிறந்ததையடுத்து அதனை கொண்டாடுவதற்காக நள்ளிரவு போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கலில் உள்ள உதவி இயக்குனர் மணிகண்டன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவரது நண்பர்கள் குருசஞ்சய், ராம்குமார் ஆகியோருடன் சேர்ந்து ஒன்றாக மது அருந்தி கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடி உள்ளார்கள். அப்போது, மணிகண்டனுக்கும், ருத்ராவிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மணிகண்டன் ஆபாசமாக பேசியதால் ருத்ரா கையில் அணிந்திருந்த மோதிரத்தால் முகத்தில் குத்தியதில் மணிகண்டன் நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து இருவரை சக நண்பர்கள் சமாதானம் செய்துவைத்துள்ளனர். பின்னர் இருவரும் வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தனர். தன்னை தாக்கியதால் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன் வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து வந்து ருத்ராவின் வயிற்றில் குத்தினார்.

இதில், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ருத்ராவை அவரது நண்பர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து மாங்காடு போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது போதையில், ஆபாசமாக பேசியதால் உதவி இயக்குனரை மற்றொரு உதவி இயக்குனர் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு 3 மாதமாக சம்பளம் கொடுக்காமல் இழுத்தடிப்பது ஏன்? - TR.பாலு