Tamilnadu

“தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து உறுதி” - அனிதா நினைவு நூலகத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

“தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என அனிதா நினைவு நூலகத்திற்கு சென்ற தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரை பயணத் திட்டத்தின்படி தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களைச் சந்தித்து வருகிறார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

அதன்படி, நேற்று முதல் அரியலூர் மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இன்று செந்துறையை அடுத்த குழுமூரில் நீட் தேர்வு காரணமாக மருத்துவக் கனவு சிதைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா நினைவு நூலகத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உதயநிதி ஸ்டாலின்.

மேலும், தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தகங்களை அனிதா நினைவு நூலகத்துக்கு தினசரி வரும் மாணவர்களுக்கு பரிசாக வழங்கி, நூலகத்திற்கு அருகில் தென்னங்கற்றையும் நட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “அ.தி.மு.க அரசு அறிவிப்புகளை திரும்பப்பெறும் அரசாக உள்ளது. கொகரோனா காலகட்டத்தில் 10-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தியே தீருவோம் என அ.தி.மு.க அரசு அறிவித்தது. தி.மு.க எதிர்த்ததால் திரும்பப்பெற்றது.

அதேபோல், திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் வசூலிப்பதற்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அ.தி.மு.க அரசு அதையும் திரும்பப் பெற்றது.

தி.மு.க நடத்தும் கிராம சபை கூட்டத்தில் மக்கள் எழுச்சியுடன் குறிப்பாக, தாய்மார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர். இதனால் கிராம சபை கூட்டத்தை அ.தி.மு.க அரசு தடுக்கிறது. தடை விதித்தாலும் கிராம சபை கூட்டம் நடைபெறும். நானும் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்வேன்.

கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.5,000 கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார் தி.மு.க தலைவர். அப்போது நிதி இல்லை என கூறிய ஆளும் அரசு, தற்போது ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.2,500 அறிவித்துள்ளது. தி.மு.க தலைவர் இன்னும் ரூ.2,500 வழங்கவேண்டும் எனக் கோரியுள்ளார்.

நான் எதிர்பார்த்ததைவிட அனைத்து பகுதிகளிலும் மக்கள் எழுச்சியுடன் உள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

Also Read: “சம்பந்தி மூலம் தனது பாக்கெட்டை நிரப்பி ஊழல் ஆட்சி புரியும் எடப்பாடி பழனிசாமி” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!