Tamilnadu

விடுதி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவர் பலி : கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தின் போது நடந்த சோகம்!

திருவள்ளூர் மாவட்டம் புதுசத்திரம் அருகே ஜமீன் கொரட்டூர் பகுதியில் தனியார் இன்டர்நேஷனல் மெரைன் கப்பல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தின் போது இறுதியாண்டு மாணவர்களுக்கும், 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்தமோதலில் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ஆதித்ய ஷர்மா (20) என்ற மாணவனை பிளாஸ்டிக் நாற்காலியின் கால் பகுதியை உடைத்து குத்தியதில் சம்பவ இடத்திலேயே மாணவன் ஆதித்யசர்மா சரிந்து விழுந்து உள்ளார்.

இதனையடுத்து மாணவனை சக மாணவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்ற போது மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மாணவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைதொடர்ந்து காவல் துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வெள்ளவேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சண்முகப்பிரியா நேரில் விசாரணை நடத்தினார்.

மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் யார் கொலை செய்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கல்லூரி மாணவன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மெரினா கடற்கரை கடை ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டும் அதிமுக அரசு: வாழ்வாதாரத்தை இழந்த மெரினா வியாபாரிகள்!