Tamilnadu

“ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நிலைதான் பழனிசாமி மற்றும் அ.தி.மு.க அமைச்சர்களுக்கும் ஏற்படும்” : ஆ.ராசா உறுதி!

தி.மு.க சார்பில் சென்னை ராயபுரத்தில் தி.மு.க சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா ஏற்பாட்டில், தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா தலைமையில் ‘அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில், கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தி.மு.க வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய வடசென்னை ராயபுர மீனவ மக்கள் மற்றும் பொதுமக்கள், அ.தி.மு.க ஆட்சியில் வாழ்வதாரம் இழந்து, வேலை இழந்து மீனவ மக்கள் பல இன்னல்களால் தவித்து வருவதாக தெரிவித்தனர்.

மேலும், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்கு மீன் சேமிப்பு கிடங்கு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின்னர் இக்கூட்டத்தில் பேசிய தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, “ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல ஊழல் புகார்கள் எழுந்தன.

அவருக்கு என்ன நிலை ஏற்பட்டதோ அதேபோல எடப்பாடி மற்றும் அ.தி.மு.க அமைச்சர்களுக்கும் ஏற்படும். நேற்று ஆளுநரை சந்தித்து முதல்வர் மற்றும் அமைச்சர்களின் மீதான ஊழல் புகார்களை கொடுத்துள்ளோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயர்நீதிமன்றத்தை நாடுவோம்.

நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுப்போம். நிச்சயம் எடப்பாடி மற்றும் அ.தி.மு.க அமைச்சர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்” எனத் தெரிவித்தார்.

Also Read: “தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே மினி கிளினிக்குகளில் அவுட் சோர்சிங் முறை” : வேல்முருகன் சாடல்!