Tamilnadu

நெசவாளர்கள் நெய்த துணிகளை தோளில் சுமந்து விற்றுக்கொடுத்து உதவியவர் கலைஞர்: கம்பம் செல்வேந்திரன் புகழாரம்!

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட ஜம்பை கிராமத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ தலைமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கழக கொள்கை பரப்புச் செயலாளர் கம்பம் செல்வேந்திரன் கலந்துகொண்டார்.

அப்போது கம்பம் செல்வேந்திரன் பேசுகையில், “ரிஷிவந்தியம் தொகுதியில் ஜம்பை மணலூர்பேட்டை பகுதியில் நெசவாளர்கள் நிறைந்து காணப்படுகிறார்கள். அவர்களுக்காக வரும் தி.மு.க ஆட்சியில் புதிதாக கட்டிடம் அமைத்து தரப்படும்.

அதுமட்டுமல்லாது, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நெசவாளர்களின் நலன் கருதி அவர்களின் துயர் துடைப்பதற்காக, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் நெசவாளர்கள் நெய்த துணியை தோளில் தூக்கி விற்பனை செய்து அவர்களுக்காக உதவியவர்கள் என்பதை மறுக்க முடியாது.

அதைப்போலவே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நெசவாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். தொடர்ந்து வரப்போகின்ற தி.மு.க ஆட்சியிலும் தொடரும். மேலும், தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற அ.தி.மு.க ஆட்சி ஊழல்வாதிகளால் கட்டமைக்கப்பட்ட ஒன்று” எனத் தெரிவித்தார்.

Also Read: அதிமுக அமைச்சரவை மீதான 97 பக்க ஊழல் புகார் மனுவை ஆளுநரிடம் கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்..!