Tamilnadu
மூத்த காங்கிரஸ் தலைவர் மோத்திலால் வோரா மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரான மோத்திலால் வோரா நேற்று உடல் நலம் குன்றி டெல்லி மருத்துவமனையில் தனது 93 வது வயதில் காலமானார்.
ஒருங்கிணைந்த மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றிய நாளில் இருந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நம்பிக்கைக்கு பாத்திரமான தலைவராக விளங்கிய வோரா அவர்கள் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையிலும் கேபினட் அமைச்சராகப் பணியாற்றினார்.
இடையில், உத்தர பிரதேச மாநிலத்தின் ஆளுநராகவும் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் மோத்திலால் வோரா அவர்கள் திறம்பட செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசுப் பொறுப்புகளன்றி காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் பதவியிலும் சிறப்பாக செயல்பட்ட வோரா, தலைவர் கலைஞர் மீது உயர்ந்த மரியாதையும் நட்புறவும் கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் தனது 93வது பிறந்தநாளைக் கண்ட வோரா அவர்களின் எதிர்பாராத மறைவுச் செய்தி அறிந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க பொருளாளரும் கழக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, மறைந்த மோத்திலால் வோராவின் புதல்வர் அருண் வோரா அவர்களுக்கு விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “1986 முதல் 1992 வரையிலான காலகட்டத்தில் தன்னுடன் ராஜ்ய சபையிலும் பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவிலும் சக உறுப்பினராகப் பணியாற்றிய காலம்தொட்டு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்த டி.ஆர்.பாலு, திரு மோத்தி லால் வோராவின் மறைவு, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய நாட்டுக்கே பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
வோரா அவர்களின் பரந்த அரசியல் அனுபவமும் சிறப்பான நிர்வாகத்திறனும் தலைமைப் பண்பும் அனைவராலும் எளிதில் அணுகக்கூடிய நட்புணர்வும் கொண்டு பணியாற்றிய பாங்கும் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவராலும் பாராட்டப்படுகிறது. அவரது மறைவு நாட்டுக்கே ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இந்த துயரமான வேளையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் தனது சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.42.94 கோடியில் 14 விளையாட்டுத்துறை கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
10 மாவட்டங்களில்.. 10 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்! : முதல்வர் திறந்து வைத்தார்!
-
திருவிழா போல் காட்சியளிக்கும் அண்ணா அறிவலாயம் : ஒரு புறம் கூட்டணி பேச்சு - மற்றொரு புறம் விருப்ப மனு!
-
ரூ.10.38 கோடி 2 புதிய ‘தோழி’ விடுதிக் கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
சிவகங்கையில் ரூ.5,300 கோடி முதலீடு செய்யும் MRF நிறுவனம்!: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!