Tamilnadu

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. ரூ.1.20 கோடி அளவில் முறைகேடுகள்? : ஐகோர்ட் மதுரைக் கிளை அதிரடி உத்தரவு!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்புகளுக்கு வழங்கும் நிதியில் முறைகேடுகள் நடப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த ஆல்பர்ட் டைட்ஸ் என்பவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் நடப்பதாகக்கூறி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை வியாபார நோக்கில் சிலர் மாற்றி வருகின்றனர்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பிற்காக பல்கலைக்கழக மானியக் குழு நிதி வழங்கி வருகிறது. பல்கலைகழக பேராசிரியர் பலவேசம், மருத்துவர் இமானுவேல் என்பவரும் இணைந்து முனைவர் பட்ட படிப்புகளுக்கு வழங்கப்படும் நிதியில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பேராசிரியர் பலவேசம் என்பவர் ஒரே ஆண்டில் பதிமூன்று ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்து முதுநிலை விஞ்ஞானி பட்டம் பெற்றுள்ளார். முனைவர் படிப்பில் ஒரு கட்டுரையை சமர்ப்பிப்பதற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும். ஆனால் இவர் ஒரே ஆண்டில் பதிமூன்று ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளது இயலாத காரியமாகும்.

இவர்கள் கூகுள் மற்றும் புத்தகங்களை வைத்து ஆய்வு கட்டுரையை முடித்து விடுகின்றனர். மேலும் ஆய்வு படிப்பிற்காக வரும் மானியத்தை முறைகேடாக கையாண்டுவருகின்றனர். இதனால் பல்கலைக்கழகத்தில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவருகிறது.

எனவே இந்த முறைகேடுகள் குறித்துதொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். இது குறித்து நான் பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பிய புகார் மனுக்கள் விசாரணையின்றி உள்ளது. எனவே இதற்காக ஒரு குழுவை ஏற்படுத்தி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு தலைவர், மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர், மற்றும் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யக்கோரி உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Also Read: “காவிரி நீர் கடைமடைக்கு செல்லவிடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு” : தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!