Tamilnadu

“காவிரி நீர் கடைமடைக்கு செல்லவிடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு” : தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

காவிரி நீர் கடைமடைக்கு செல்லவிடாமல் தடுத்து வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தும் போலி நீரேற்று பாசன விவசாய கூட்டுறவு சங்கங்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.கவின் விவசாயிகள் அணி செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.. அந்த வழக்கில் காவிரியில் இருந்து திறந்துவிடப்படும் நீர் கடைமடை பகுதிக்கு முழுமையாக சென்றடைவதில்லை என்றும் குறிப்பாக சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி நீர் திசை மாற்றப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அந்த பகுதிகளில் போலியான நீரேற்று பாசன விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் துவங்கப்பட்டு, அதிக திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்தி நீர் உறிஞ்சப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாமல், வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதாகவும் மேலும் நீர் பாசன விவசாய சங்கங்கள் கிணற்று நீரைத் தான் எடுக்க முடியுமே தவிர காவிரி நீர் எடுக்க முடியாது என்றும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Also Read: “எதிர்க்கட்சியினரை அவதூறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” - எடப்பாடி அரசுக்கு சென்னை ஐகோர்ட் ஆணை!