Tamilnadu
“டெல்லியில் போராட்டம் முடிவுக்கு வரும்வரை தமிழ்நாட்டிலும் போராட்டம் தொடரும்” - விவசாயிகள் அறிவிப்பு!
பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில், இதுவரை 30க்கும் மேற்பட்டோர் போராட்டக் களத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த விவசாயிகளுக்கு கிராமங்கள்தோறும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்த அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்தது. அதன்படி, மிளகுபாறையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மற்றும் குழுமணி சாலையில் உள்ள மேல பாண்டமங்கலம் அரவானூர் ஆகிய இடங்களில் இன்று அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவசூரியன் தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் இந்திரஜித் முன்னிலையில் மிளகுபாறையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், சி.பி.ஐ, சி.பி.ஐ.எம் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில், டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் இந்திரஜித், “டெல்லியில் கடும் குளிரிலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தைக் கலைப்பதற்காக தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக் குளிரில் நடுங்க வைத்தது உள்ளிட்ட அடக்குமுறைகளால் விவசாயிகள் 33 பேர் உயிரிழந்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்தைக் கண்டு மனம் தாளாமல் சீக்கிய மதகுரு ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடன் தொல்லையால் நாட்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் ஏராளமானோரின் மனைவிகளும் போராட்டத்தல் பங்கேற்றுள்ளனர். தற்போது போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் டெல்லிக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் முடிவுக்கு வரும் வரை தமிழ்நாட்டிலும் போராட்டம் தொடரும். தேவைப்பட்டால் டெல்லிக்கு நாங்களும் செல்வோம்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!