Tamilnadu

தி.மு.க எம்.பி.க்களை அவமதித்த தலைமை செயலாளருக்கு பரிசா? - பதவிக்காலத்தை நீட்டிக்க எடப்பாடி அரசு திட்டம்!

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம், மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், கடந்த ஆண்டு பதவியேற்றார். அவரது பதவிக்காலம் ஜூலை மாதம் நிறைவடைந்தது. கொரோனா பரவல் அதிகமிருப்பதால் பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசு பரிந்துரை செய்ததையடுத்து மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் சண்முகத்தின் பதவிக்காலம் நிறைவடைந்தது. அவருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கும்படி, தமிழக அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் மேலும் மூன்று மாதங்களுக்கு பதவிக் காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

அவ்வகையில், தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 31ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்நிலையில் மேலும், ஆறு மாதங்களுக்கு அவரது பதவி காலத்தை நீட்டிக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மிகவும் இணக்கமானவரான சண்முகம், அறிவிக்கப்படாத அ.தி.மு.க நிர்வாகியைப் போலவே செயல்படுவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர், பொதுமக்களிடமிருந்து பெற்ற கோரிக்கை மனுக்களை தி.மு.க எம்.பிக்கள் தலைமை செயலாளர் சண்முகத்திடம் ஒப்படைக்கச் சென்றபோது, அவர்களை கண்ணியக் குறைவாக நடத்தி மொத்த அரசமைப்பையும் அவமதித்த விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவ்வாறு வெளிப்படையாகவே மக்கள் நலன் கருதாமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவான போக்கைக் கையாளும் சண்முகத்தை மேலும் பதவியில் நீட்டிக்கச் செய்வதற்கான முயற்சியில் எடப்பாடி பழனிசாமி அரசு ஈடுபட்டு வருவது அரசு அதிகாரிகள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் இருக்கும் நிலையில், தலைமை செயலாளரின் பதவிக்காலத்தை இத்தனை முறை நீட்டிக்க வேண்டிய அவசியம் என்ன அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

Also Read: மக்கள் மீது விலை உயர்வை திணிக்கும் மோடி அரசு.. இதுதான் ஆட்சியாளர்களின் கடமையா? - மு.க.ஸ்டாலின் வேதனை!