Tamilnadu

“விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க தோழமைக் கட்சிகளின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு”: எடப்பாடி அரசு அராஜகம்!

மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 22 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன. மேலும், தொடர்ந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தனர்.

மேலும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு சென்னை மாநகர காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். ஏற்கனவே, தொற்றுநோய் தடுப்பு சட்டம் மற்றும் சென்னை காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், போராட்டம் நடத்துவதற்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா ஊரடங்கு தளர்வுகளில், பொது இடங்களில் ஒன்று கூடி போராட்டம் - ஆர்ப்பாட்டம் நடத்த இன்னும் தடை உள்ளதாலும், இந்த அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசுக்கு எதிராக தமிழகத்தில் நடக்கும் போராட்டத்திற்கு, எடப்பாடி அரசு தொடர்ந்து தடைவித்தித்து வருகிறது. மேலும் தடையை மீறி நடக்கும் போராட்டங்களையும், காவல்துறைக்கொண்டு ஆளும் அ.தி.மு.க அரசு ஒடுக்கி வருகிறது. அ.தி.மு.க அரசின் இத்தகைய அராஜக போக்கிற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகிறனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “விவசாயிகளுக்கான போராட்டங்களில் காவல்துறை மூலம் வன்முறை ஏற்படுத்தும் எடப்பாடி அரசு?” : வலுக்கும் கண்டனம்!