Tamilnadu

மூட நம்பிக்கையின் உச்சம்: மனநிலை பாதிக்கப்பட்டவரை பேய் விரட்டுவதாக அடித்ததில் உயிரிழப்பு - சாமியார் கைது!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா. இவரது கணவர் மகபூப் பாஷா கடந்த ஜூன் மாதம் முதல் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகே இருக்கும் தர்காவில் அவரை இரண்டு நாட்கள் வைத்து பேய் பிடித்ததாக கூறி மந்திரம் ஓதி உள்ளனர்.

ஆனால், குணமடையாததால் ஆயிஷாவின் உறவினர்கள் வீடான செங்குன்றம் அருகே உள்ள கொத்தூர் அம்மன் கோயில் அருகில் திருநங்கை சாமியார் சங்கர் என்பவரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு மகபூப் பாஷாவை பத்து நாட்கள் தங்க வைத்து பூஜை செய்துள்ளனர்.

அப்பொழுது மகபூப் பாஷாவுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி திருநங்கை சாமியார் அவரை பிரம்பால் அடித்துள்ளார். இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மகபூப் பாஷாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், மூச்சுத்திணறல் ஏற்பட்ட மகபூப் பாஷா பாதி வழியிலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது மனைவி ஆயிஷா வண்ணாரப்பேட்டை காவல் நிலைத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் பிரேத பரிசோதனை செய்ததில், மகபூப் பாட்ஷாவை திருநங்கை சாமியார் அடித்ததால் ஏற்பட்ட உள் காயத்தால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.

இதனையடுத்து செங்குன்றத்தை சேர்ந்த திருநங்கை சாமியார் சங்கரை வண்ணாரப்பேட்டை போலிஸார் கைது செய்துள்ளனர். பேய் விரட்டுவதாக கூறி சாமியார் அடித்ததில் மகபூப் பாஷா உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “வாடகை கொடுக்கக் கூட பணம் இல்லை” : தொடர்ந்து தொழில் நடத்த முடியாமல் சென்னையில் 2,000 ஓட்டல்கள் மூடல்!