Tamilnadu

விழுப்புரம் உட்பட 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - அடுத்த 2 நாட்களுக்கான வானிலை நிலவரம்

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர் “குமரிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது என்றும் கூறினார்.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மனம் பூண்டியில் 17 செ.மீ மழையும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 16 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்து வரும் இரு தினங்களை பொருத்தவரையில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், கனமழை பொருத்தவரையில் கடலோர மாவட்டங்களான விழுப்புரம், புதுவை, காரைக்கால், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் , திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

வடகிழக்கு பருவமழை பொறுத்தவரை கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு 452 மி.மீ என குறிப்பிட்ட அவர், இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 419 மி.மீ என்றும், இது இயல்பை விட 8 சதவீதம் அதிகம் எனவும் கூறினார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை. சென்னையை பொறுத்தவரை கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பெய்த மழையின் அளவு 1034 மி.மீ. இந்த காலகட்டத்தில் 734 மில்லிமீட்டர் பதிவாகும். இது இயல்பைவிட 41 சதவீதம் அதிகம்.