Tamilnadu
“விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி” : தமிழக அரசுக்கு முத்தரசன் எச்சரிக்கை!
விவசாயிகளுக்கு ஆதரவாக அமைதியான முறையில் தொடங்கியுள்ள போராட்டத்தை தமிழ்நாடு அரசு, காவல்துறை மூலம் சீர்குலைத்து, சிறுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு செப்டம்பர் மாதம் நிறைவேற்றியுள்ள மத்திய விவசாயிகள் விரோதச் சட்டங்களையும், மின்சார சட்டத்திருத்த மசோதாவையும் திரும்பப் பெற வலியுறுத்தி, நவம்பர் 26 முதல் தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் அமைதியான முறையில், ஜனநாயக வழிமுறையில் போராடி வருகிறார்கள்.
19வது நாளாக தொடரும் போராட்டத்தை ஆதரித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் இன்று (14.12.2020) நாடு முழுவதும் விவசாயிகள் ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. அமைதியான முறையில் தொடங்கியுள்ள போராட்டத்தை தமிழ்நாடு அரசு, காவல்துறை மூலம் சீர்குலைத்து, சிறுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அமைதிமுறை போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையின் தலையீட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மாநில முதலமைச்சரை வலியுறுத்திக் கொள்கிறது. இதில் காவல்துறையின் அத்துமீறல் தொடருமானால் ஏற்படும் விளைவுகளுக்கு தமிழ்நாடு அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது... நீதிமன்ற உத்தரவை மீறி அராஜகத்தில் ஈடுபடும் தவெக அரசு!
-
“நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்புவேன்..” - கர்ஜித்த உதயநிதி.. போலீசை ஏவிய தவெக அரசு!
-
காவிரி விவகாரம் : “கர்நாடகாவை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?..” : விஜயை Left Right வாங்கிய முரசொலி !
-
“கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வந்தது... ஆனால் இந்த ஆண்டு?” - விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!
-
காவிரி விவகாரம்.. முதலமைச்சர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி!