Tamilnadu

பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை கொன்ற பேரன்- வேலூர் அருகே அதிர்ச்சி சம்பவம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மோடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி (60) இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று ராஜேஸ்வரி வீட்டில் பிரியாணி சமைத்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் ராஜேஸ்வரியின் மூத்த மகன் வழிப் பேரன் ராகேஷ் (20) வந்துள்ளார். அப்போது அங்கு ராஜேஸ்வரியின் மகள் வழிப் பேரன் மற்றும் பேத்திகள் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் என்னை ஏன் பிரியாணி சாப்பிட அழைக்கவில்லை எனக் கேட்டு அவரது தாத்தா கண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி இருவரையும் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ் தனது பாட்டி ராஜேஸ்வரியை கைகளால் தாக்கியதோடு, அருகில் இருந்த சாலைக்கு இழுத்து வந்து தள்ளிவிட்டுள்ளார். தார்சாலையில் விழுந்த ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா போலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ராகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை பேரன் கொலை செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: ரேஷன்கடை திறப்பின்போது கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க நிர்வாகிகள்- மக்கள் சுற்றிவளைத்ததால் தப்பியோட்டம்!