Tamilnadu
பழுதடைந்த மதுரவாயல்-வாலாஜா நெடுஞ்சாலை.. முறையாக பராமரிக்காதது ஏன்? - நெடுஞ்சாலைத்துறைக்கு ஐகோர்ட் கேள்வி!
சென்னையை அடுத்த மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேசிய நெடுஞ்சாலைகள் துறை ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் இந்த சாலையில் உள்ள குண்டு குழிகள் அனைத்தும் 10 நாட்களில் நிரப்பப்பட்டு பழுது நீக்கம் செய்யப்படும் எனவும் 50 கோடி ரூபாய் செலவில் சாலையை மீண்டும் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் சாலைகளின் தரம் உலக தரத்துக்கு இணையாக இல்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரவாயல் - வாலாஜா சாலை சரி செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
சென்னை பெங்களூர் சாலையில் மட்டும் ஆண்டுக்கு 500க்கும் மேற்பட்ட விபத்துகள் நடப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மோசமான சாலைகளால் ஏற்படும் விபத்துக்களை இழப்பீடு கோரும் போது பாதிக்கப்பட்டவர்கள், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மாநில நெடுஞ்சாலைகள் துறை எதிர் மனுதாரராக சேர்க்கவேண்டும் என அறிவுறுத்தினர்.
பின்னர் மதுரவாயல் வாலாஜா சாலை பழுது நீக்கம் செய்யும் வரை இரண்டு வாரங்களுக்கு அந்த சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதேபோல சென்னை நொளம்பூரில் நெடுஞ்சாலை ஓரம் மூடப்படாத மழைநீர் வடிகாலில் விழுந்து தாய் மகள் இறந்த சம்பவம் தொடர்பான பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், பலியான தாய் மகளுக்கு தமிழக முதல்வர் இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தர விட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இழப்பீடு வழங்குவது தொடர்பாக பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!