Tamilnadu

“TN 43 : காவி வண்ணத்தில் ஊட்டி மலை ரயில்” : நபர் ஒன்றுக்கு ரூ.3,000 கட்டணம் - தவிக்கும் சுற்றுலா பயணிகள்!

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலைப் பாதையில், நீராவி இன்ஜின் மூலம் மீட்டர் கேஜ் ரயில் இயக்கப்படுகிறது. 1908ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்த ரயில் சேவை துவங்கப்பட்டது.

இந்த ரயில் ஊட்டியில் மலை அழகு அனைத்தையும் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வண்ணம் சுமார் 46 கி.மீ தூரம் பயணிக்கும். இந்த நிலையில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களின் பட்டியலில், இமயமலையில் உள்ள டார்ஜிலின்ங் ரயில் சேவை, மற்றும் ஊட்டி மலை ரயில் சேவை ஆகியவற்றை 2005 ஜூலை மாதம், யுனெஸ்கோ சேர்த்தது.

இவ்வளவு சிறப்பு மிக்க ஊட்டி மலை ரயில் சேவையை மோடி அரசாங்கம் தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. மோடி அரசு ஆட்சி அதிகாரித்திற்கு வந்ததில் இருந்தே பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கும் வேலையை மும்பரமாக செய்து வருகிறது.

மோடி அரசின் தனியார் மயக்கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் அவ்வபோது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அந்த போராட்டங்களை காதில் வாங்கிக்கொள்ளாமல், பொதுத்துறையை தனியாரிடம் ஒப்படைத்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தனது விசுவாதத்தை காட்டி வருகிறார் பிரதமர் மோடி.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை சேவையான ரயில்வே துறையை ஏற்கனவே விற்கும் நடவடிக்கைக்கு மோடி அரசு இறங்கியுள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்வே மற்றும் அதன் சேவைகளை முழுவதுமாக தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்போது மத்திய ஆட்சியாளர்கள், ஊட்டி மலை ரயில் சேவையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டார்கள். இதன்விளைவாக பயணக் கட்டணம் 100 மடங்கு உயர்ந்து ரூ.3000 வரை வசூலிக்கப்பட்டுகிறது. இதனால், பயணிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால், மார்ச் மாதத்தில் இருந்து மலை ரயில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு, 'டி.என்.43' என்ற பெயரில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை தனியார் மலை ரயில் இயக்கம் துவங்கியது. இதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்று வர ஒரு நாளை ரூ. 4.80 லட்சம் தொகை நிர்ணயிக்கப்பட்டு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அதனால், இந்த தனியார் மலை ரயில், இன்ஜின் ஓட்டுனர்களை தவிர மற்ற ஊழியர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஆவர்கள். இந்த ரயில் பயணம் செய்ய ஒரு சுற்றுலா பயணிக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு பயணக் கட்டணமாக, 3,000 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ரூ.475 ஆக இருந்த மலை ரயில் கட்டணம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த தனியார் மலை ரயிலில், விமான பணி பெண்களை போன்று பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரியில் இருந்து, தினமும் தனியார் மலை ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, இயங்கிய மலை ரயில் இயக்கப்படும் போது, தனியார் மலை ரயிலின் நேரம் மாற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஊட்டி மலை ரயிலை தனியாரிடம் ஒப்படைத்த நடவடிக்கைக்கு கண்டித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகின்றது இந்நிலையில் இதன் வழித்தடத்தில் சிறப்பு ரயிலும் கட்டணம் அடிப்படையில் இயக்கப்பட்டு வந்தது.

சுமார் 4.5 லட்சம் ரூபாய் ரயில்வேக்கு கட்டணம் செலுத்தி சிறப்பு ரயிலை தனியார் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே துறையே இயக்க வேண்டும் என தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். இந்நிலையில் கொரானா தொற்று காரணமாக மலை ரயில் சேவையும், சிறப்பு ரயில் கட்டண சேவையும் நிறுத்தப்பட்டது. தற்போது வரை உதகை செல்ல இ பாஸ் நடைமுறை இருந்து வருகின்றது.

இந்நிலையில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மொத்தமாக ரயில்வே நிர்வாகத்திற்கு கட்டணத்தை செலுத்தி சிறப்பு மலை ரயிலை வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறார். மலை ரயிலில் பயணிக்க நபர் ஒருவருக்கு ரூ.2,500 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சிறப்பு ரயிலில் இருக்கும் தனியார் நிறுவன பணிப்பெண்கள், விமானத்தில் பயணிகளுக்கு உணவு பொருட்களை கொடுப்பது உள்ளிட்ட வசதிகளை செய்துள்ளனர். இதுஒருபுறமிருக்க ரயிலின் முன் பகுதியில் தெற்கு ரயில்வே முத்திரைகள் எதுவும் இல்லாமல் TN 43 என்ற தனியார் நிறுவனத்தின் பெயரில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. மேலும் ரயிலின் முன்புற பகுதியும் காவி வண்ணத்தில் மாற்றப்பட்டு உள்ளது. மேலும் வழக்கமாக இயக்கப்படும் மலைரயில் இதுவரை சேவை இதுவரை துவங்காத நிலையில், சிறப்பு கட்டண ரயில் சேவை மட்டும் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து இருக்கிறது.

கட்டண ரயிலை மொத்தமாக தனியாருக்கு வாடகைக்கு விடுவதன் மூலம், சிறப்பு கட்டண ரயில் கொண்டு வரப்பட்டு இருப்பதன் நோக்கத்தை சிதைப்பதுடன், தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் ஊட்டி ரயில் தாரைவார்க்கப்பட்டு உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக ரயில்வே துறை உதகை சிறப்பு மலை ரயிலை தனியாரிடம் தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: திருவனந்தபுர ஏர்போர்ட்டை அதானியிடம் ஒப்படைக்க கேரள அரசு ஒத்துழைக்காது - பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்